Friday 30 September 2016

சகல நன்மைகளும் தரும் மஹாலட்சுமி தலங்கள்

நவராத்திரி ஆரம்பம் - 01.10.2016

திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் மகாலட்சுமி தனி சந்நதியில் அருளாட்சி புரிகிறாள். அவள் சந்நதிக்கெதிரே உள்ள லட்சுமி தீர்த்தத்திலிருந்தே ஆலய வழிபாடுகளுக்கு நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ராமேஸ்வரம் ஆலய பிராகாரத்தில் மகாலட்சுமி கொலுவிருக்கக் காணலாம். அவள் திருமுன் சிவலிங்கம் இடம்பெற்றுள்ளது. ராமபிரானின் பிரம்மஹத்தி தோஷம் போக்கிய ஈசனை திருமகள் வணங்கும் அபூர்வத் திருக்கோலம் இது.

மும்பை - போரிவிலியை அடுத்த வசை எனும் இடத்தில் ஹேதவடே கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் திறக்கப்படும் மகாலட்சுமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரு பாறையே திருமகளாக வழிபடப்படுகிறது.

பத்ரிநாத்தில் மகாலட்சுமிக்கு தனிக்கோயில் உள்ளது. சாளக்கிராம கற்கள் வடிவில் தேவி இங்கு அருள்கிறாள்.

செங்கல்பட்டு படாளம் அருகே உள்ள அரசர் கோயிலில் ஆறு விரல்களைக் கொண்டு சுந்தரமகாலட்சுமி எனும் திருநாமத்தோடு திருமகள் அருளாட்சி புரிகிறாள்.

ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி நரசிம்மர் ஆலயத்தில் மலையின் மேல் சாந்த நிலையில் ஆபரணங்கள் ஏதுமின்றி தவம் செய்யும் நிலையில் மகாலட்சுமியை தரிசிக்கலாம்.

சென்னை - பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமிகளோடு ஆதிமகாலட்சுமியையும் நாராயணரையும் வணங்கி மகிழலாம்.

நாச்சியார் கோயிலில் வஞ்சுளவல்லி எனும் பெயரில் மகாலட்சுமி அருள்கிறாள். இங்கு முதல் வழிபாடு அனைத்தும் தாயாருக்கே நடைபெறுகிறது.

சென்னை - பூந்தமல்லிக்கு அருகே உள்ள  போரூர் மதனானந்தபுரத்தில் உள்ள முப்பெருந்தேவியர் ஆலயத்தில் பிரதான கருவறையில் மும்பை மகாலட்சுமியை தரிசிக்கலாம்.

காஞ்சிபுரம் காமாட்சி ஆலய கருவறையின் கோஷ்டங்களில் அரூபலட்சுமி, சௌந்தர்யலட்சுமி இருவரும் அருளாட்சி புரிகின்றனர்.

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் எனும் இடத்தில் மகாலட்சுமிக்கென்றே ஒரு தனிக்கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

மும்பையில் மலபார் குன்றின் அடிவாரத்தில் ப்ரீச் காண்டி எனுமிடத்தில்  மகாலட்சுமி, சரஸ்வதி- துர்க்கையோடு அருள்கிறாள். மும்பை நகரின் செல்வச் செழிப்பிற்கு இந்த மகாலட்சுமியே காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை.

மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகே திருநின்றியூர் என்கிற தலம் உள்ளது. இங்கு மகாலட்சுமி ஈசனை பூஜித்ததால் லட்சுமிபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். 

புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆலயத்தில் அஷ்டதசபுஜ மகாலட்சுமி எனும் பெயரில் தேவி மகாத்மியம் வர்ணனைப்படி துலங்கும் மகாலட்சுமியை தரிசிக்கலாம்.

திருப்பதி - திருச்சானூரில் அன்னை மகாலட்சுமியே அலர்மேலுமங்கைத் தாயாராக அருள்கிறாள். 

திருப்பத்தூர் திருத்தளி தலத்தில் ஈசனின் தாண்டவ திருக்கோலத்தைக் காண தவம் புரியும் நிலையில் திருமகளை தரிசிக்கலாம். திருமகளுக்காக ஈசன் ஆடிய லட்சுமி தாண்டவத்தையும் அங்கு நாம் தரிசிக்கலாம்.

சென்னை - மயிலை மாதவப்பெருமாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வில்வார்ச்சனை நடைபெறும் மகாலட்சுமி தேவியை மயூரவல்லித்தாயார் எனும் பெயரில் தரிசிக்கலாம்.

ஹைதராபாத்தில் யாதகிரிகுட்டாவில் மகாலட்சுமி தேவி நரசிம்மமூர்த்தியோடு அருளாட்சி புரிகிறாள்.

ஆதிசங்கரருக்கு தங்க நெல்லிக்கனிகளாக பொழியச் செய்த மகாலட்சுமி பிரசன்னமான வீடு இன்றும் கேரளாவில் ‘ஸ்வர்ணத்து மனை’ எனும் வீடாக பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது.

திருமகள், கோவிந்தனோடு ஐக்கியமாக, பெருமாள் திரிபங்கநிலையில் காட்சி தரும் தலம் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள ஆப்பூரில் உள்ளது. மூலிகைகள் நிறைந்த மலை மீது உள்ளது இக்கோயில். இத்தலத்தில் பெருமாளுக்கு பட்டுப்புடவையே சாத்தப்படுவது குறிப்பிடத்தகுந்தது.